Friday 1 February 2008

A Love Story......

நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

தொன்னூற்றி ஏழாம் வருட நவம்பர் மாத ஏழாம் தேதியன்றுதான் நாம் முதலில் சந்தித்துக் கொண்டோம்.எலெக்ட்ரானிக்ஸ் லேப் முன்பா? அல்லது சிவில் நூலகத்திலா? எந்த இடம் என்பது மறந்து போய்விட்டது.ஐந்தாவது செமஸ்டர் ஆரம்பமாயிருந்த சமயம் மெர்க்குரிப்பூக்கள் திரும்ப நூலகத்தில் கொடுங்களேன்.. நான் படிக்க வேண்டும்.. எனக் கேட்டிருந்தாய்.தகவல் சொன்ன அந்த நூலகனை உதைக்க வேண்டும் என மனதில் கறுவிக்கொண்டே திருப்பிக் கொடுத்தேன்.கல்லூரி மலரில் உங்கள் கவிதை படித்தேனென்று ஒருமுறையும் நான் உங்க பக்கத்து ஊருதான் என்று ஒருமுறையும் கேண்டீனில் பார்த்துக்கொண்டபோது சொன்னாய்.நள்ளிரவு சீட்டுக் கசேரிகளினூடே ரவி சொன்ன அந்த பிகர் நல்லா கீரா மச்சி! தான் உன்னைப் பற்றி யோசிக்க வைத்தது.ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ராமஜெயம் பஸ்ஸில் எனக்காக காத்திருந்ததை நான் எதிர்பார்க்கவில்லை.நேருக்கு நேர் எங்கெங்கே பாடல் எனக்கு ரொம்ப பிடிக்குமென்று சொல்லிக்கொண்டிருந்தாய்.நீ ஏதோதோ பேசிக்கொண்டு வர மிக அருகில் மல்லிகைப்பூ வாசனைகளுடன் ஒரு பெண்ணை எதிர்பார்த்திராததால் வாயடைத்து மெளனமாகவே வந்து கொண்டிருந்தேன்.சனிக்கிழமை காலை தொலைபேசியில் உன் குரல் கேட்கத் தவிப்பாய் இருந்தது.அந்த திங்கட்கிழமையா? அடுத்த திங்கட்கிழமையா? மெக்கானிகல் பில்டிங் பின்னாலிருந்த மைதானத்தில் வைத்து உன்னை காதலிப்பதாய் சொன்னேன் என நினைவு.சற்றுப் பெரிய விழிகள் உனக்கு சட்டெனக் குளமானதில் தவித்துப் போனேன்.பதிலெதுவும் சொல்லாமல் விலகிப்போனாய்.அகிலாவிடம் இந்த ஆம்பள பசங்க இப்படித்தான் என வன்மத்துடன் சொல்லியிருந்தாய்.அகிலா அவ கிடக்கிரா விடுறா என ஆறுதல் சொன்னபோது அழுகை முட்டிக்கொண்டு வந்தது.பிரியும் தருணங்களில் நட்புக்கரம் நீட்டியபோது குழந்தையின் குதூகலத்துடன் விரல் பிடித்துக் கொண்டாய்.என்றென்றைக்குமான தோழி ப்ரிய ஸ்நேகிதி என உளறிக் கொட்டி முப்பது பக்க கடிதம் கொடுத்தேன் (இன்னும் வைத்திருக்கிறாயா அதை?)உலகின் அடிவானத்தை மீறிய அழகு இரண்டு மிகச்சிறிய இதயங்களின் நட்பில் இருக்கிறதென அறிவுமதியை துணைக்கழைத்தேன்.ஓசூரிலிருந்த முதல் இரண்டு மாதங்களில் வாரம் இரண்டு முறையாவது பேசிக்கொண்டோமில்லையா?உனக்கு தொலைபேச எடுத்துக்கொண்ட சிரமங்கள் நீ அறியாதது.தொலைபேசியில் கூட ஆண் குரல் அனுமதியில்லை என்பாளே உன் வார்டன் அவள் பெயரென்ன ஏதோ பாட்டுடன் சம்பந்தப்படுத்தி கிண்டலடிப்போமே.அண்ணாமலை நகர் எஸ் டிடி பூத் பெண்கள் என்னை எங்கு பார்த்தாலும் நமுட்டு சிரிப்பொன்றை உதிர்ப்பார்கள்.குளிக்கும்போது எட்டிப்பார்த்ததுபோல் கூசிப்போவேன்.


அடுத்த எட்டு மாதங்கள் உன் பிறந்த நாள்,என் பிறந்த நாள், நியூ இயர், உன் நினைவு வந்தது என ஒருமுறை இப்படியாய் தொலைபேசிக்கொண்டோம்.நான் எத்தனை கடிதங்கள் போட்டேன் என நினைவில்லை.ஒரு நள்ளிரவில் உனக்கு கடிதமெழுதிக்கொண்டிருந்தபோது அண்ணா பார்த்து விட்டார் ஆனால் எதுவும் கேட்கவில்லை.பின்பு பாண்டிச்சேரிக்கு மாற்றலாகிப் போய்விட்ட இரண்டு மாதங்கள் கழித்து தொலைபேசினாய்.படிப்பு முடிந்தது வேலைக்கு முயற்சிப்பதாய் கேட்டவுடன் மகிழ்ந்து போனேன்.உடனடியாய் அலுவலக ஏ.ஜி எம் மை அருவி பாருக்கு கூட்டிபோய் உன் வேலையை உறுதி செய்தேன்.உனக்கு ஹாஸ்டல் தேடியது நினைவிருக்கிறதா? அந்த அப்ளிகேசனில் கார்டியன் என்ற இடத்தில் என் கையொப்பமிட்டது இன்னமும் மகிழ்வைத் தருகிறது.


இரண்டாயிரம் வருட ஜீன் மாத ஒன்றாம் தேதி விஜயன் பைக்கில் ஆஸ்டலில் இருந்து உன்னை கூட்டி வந்தேன்.அந்த ஆறு மணி குளிர்.. ஆளில்லாத நேரு வீதி.. என் காதோரத்தில் உன் மூச்சுக் காற்று.. மற்றும் உன் பிரத்யேக வாசனை(ஒரு நள்ளிரவில் இது என்னடி வாசனை என கிறங்கியபோது ஃபேர் எவர் க்ரீம் பா என சொல்லி என் முகம் சுருங்கியதைப் பார்த்து சிரித்தாயல்லவா) இவைகளோடு அலுவலகத்தில் இறக்கி விட்டது மறக்க முடியாத தருணம்.அதற்கெனவே தொடர்ந்து இரவுப்பணி வாங்கிக்கொண்டேன்.எல்லா மாலைகளிலும் கடற்கரைக்கு போவதை விடவில்லை இல்லையா? கடற்கரைக்கெதிர்த்தார் போலிருந்த பூவரச மரமொன்றின் கீழிருக்கும் மரப்பெஞ்சு நமக்கெனவே உருவானதாய் சொல்லி சிலாகிப்போம்.இதற்க்கு ஏன் காதலர் பூங்கா எனப் பெயர்? நண்பர்கள் நாம் கூடத்தான் வருகிறோம் என கள்ளச் சிரிப்பை மறைத்தபடி நீ கேட்ட மாலையில் தான் கங்கா வைப் பற்றி சொன்னேன் அப்போதுதான் முதன் முதலில் என் உள்ளங்கை பிடித்தாயல்லவா?ஆங்! இன்னொரு சந்தர்ப்பம் ராமன் திரையரங்கில் அலைபாயுதே பார்த்துக் கொண்டிருந்த போது சட்டென உணர்ச்சி வயப்பட்டு என் உள்ளங்கையை கெட்டியாக பிடித்துக்கொண்டாய் என்ன? என்ன? எனப் பதறிக்கேட்டதற்க்கு எதுவுமில்லையென தலையசைத்தாய் ஆனால் உன் விழியோரம் துளிர்த்திருந்த நீர் அந்த இருட்டிலும் மின்னியது.


ஆகஸ்ட் இருபத்தேழாம் தேதி மதியம்தான் நான் முதலில் தங்கியிருந்த அந்த மொட்டை மாடி இருட்டறையில் உன்னை முத்தமிட்டேன். (உலகிலேயே மிகவும் பிடித்த இடமென்று அடிக்கடி சொல்வாயே) அந்த துணிவு எப்படி வந்ததெனத் தெரியவில்லை அதற்க்கு முன்பு எத்தனையோ நாட்கள் தனித்திருந்தும் எதுவும் நேர்ந்து விடவில்லை அன்று உன்னை முத்தமிட எந்த முன் தீர்மாணங்களுமில்லை வெகு இயல்பாய் நிகழ்ந்தது அது… ஒரு பூ இதழ் விரிப்பது போல.அதற்க்குப்பின் முதல் ஷிப்ட் முடித்துவிட்டு நேராய் என் அறைக்கு வந்து விடுவாய் மூன்று மணிக்கு கதவையே பார்த்தபடி உட்கார்ந்திருப்பேன்.எத்தனை முத்தங்கள் ஹேமா! அப்பா ஏன் அப்படி செய்தோமென இருக்கிறது.கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் முத்தம்தான்.உலகத்திலேயே உடல்மொழியை முதலில் பேசிவிட்டு காதலை உறுதி செய்தவர்கள் நாமாகத்தான் இருக்கமுடியும்.ஃபார்மலாக நீ எப்போது என்னை காதலிக்கிறேன் என சொன்னாய் என மறந்து போய்விட்டது(தேதிகளை நினைவுபடுத்திக் கொள்ள பச்சை நிற டைரியை இப்போது படிப்பதில்லை ஹேமா) புயலும் மழையுமாயிருந்த ஒரு நாளின் இரவில் பார்த்தே ஆக வேண்டுமெனத் தொலைபேசினாய்.ஏழு மணிக்குப் போன மின்சாரம் ஒன்பது மணி வரை வந்திருக்கவில்லை.ஒரு மரம் விழும் சப்தம் கேட்டது வா! போய் பார்க்கலாம் என ரோமண்ட் ரோலண்ட் நூலகத்திற்க்காய் சென்றோமே. மின்சாரம் இல்லாத அந்த இரவில் ஒளிர்ந்த பிரஞ்சு வீதிகள் எத்தனை அழகு ஹேமா!நூலகத்தை ஒட்டியிருந்த அசோக மரம் புயலுக்கு இரையாகியிருந்தது மிகுந்த வருத்தங்களுடன் பார்த்தபடி தெருவை கடந்து மூலை திரும்புகையில் என்னைக் கட்டிக் கொண்டாய் அந்த இருளில் உன் உதட்டில் முத்தமிட்டதுதான் என் சிறந்த முத்தமென கிறக்கமான மதியங்களில் சிலாகிப்பாய்.டிசம்பர் இருபத்து மூன்றாம் நாள் கார்த்திகை தீபத்திற்க்கு ஊருக்குப் போகாமல் அறைத்தோழனை சரிகட்டி ஊருக்கனுப்பி உன் வருகைக்காக காத்திருந்தேன் கைக்கொள்ளாமல் அகல் விளக்குகளை வாங்கி வந்திருந்தாய்.தாழ்பாளில்லாத என் குளியலறையில் எவ்வளவு நம்பிக்கைகளோடு குளித்துவிட்டு வந்தாயென சிலாகித்தபோது பாக்கறதுன்னா பாத்துக்கோங்க என கிறங்கடித்தாய் மேலும் உன் மேல உன்ன விட அதிக நம்பிக்கை விஸ்வா! எனக்கு எனச் சொல்லி என் வன்மையான முத்தத்திலிருந்து அந்த தருணத்தை பாதுகாத்துக் கொண்டாய். பாவாடை தாவணியில் உன்னைப் பார்த்தது இல்லை என எப்போதோ சொல்லியிருந்ததை நினைவில் வைத்திருந்து கையோடு கொண்டு வந்திருந்த மல்லிகைப்பூ, கொலுசு, பாவாடை தாவணி சகிதமாய் நீ சடுதியில் மாறிப்போனாய் எப்படி இருக்கேன் என முன் வந்து கேட்ட தருணம் வெகு நாட்கள் கனவில் வந்தது ஹேமா!.மின்சார விளக்குகளை அணைத்து விட்டு அறைமுழுக்க அகல் விள்க்குகளை ஏற்றி வைத்தோம் தீபத்தின் ஒளியில் ஒளிர்ந்த அறையின் நடுவில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தோம்.எண்ணெய் தீர்ந்து அகல் விளக்குகள் குளிர்ந்தபின்பும் விளக்குகளைப் பொருத்தாமல் பால்கனி சன்னல்களினூடாய் உள் விழுந்த நிலவொளி வெளிச்சத்தில் புதைந்தபடி வானம் பார்த்தோம். நட்சத்திரத்தினுள் ஒன்றைத் தெர்ந்தெடுத்து அதனிடம் சொன்னாய் ஏ! நட்சத்திரமே பார்த்துக்கொள் இதே போன்றொரு சந்தர்ப்பத்தில் மீண்டும் உன்னிடம் பேசும்போது இவரின் குழந்தையை நான் சுமந்திருப்பேன்.(நீ எப்போதும் என்னை ஒருமையில் கூப்பிட்டதில்லையே ஏன் ஹேமா?) ஏதாவது பாடுங்களேன் எனக் கேட்டதற்க்கு கண்கள் மூடி..சுவற்றில் சாய்ந்து உன் மடி மீது கால் தூக்கிப்போட்டு கனாக் காணும் கண்கள் மெல்ல பாடினேனே..செத்துடனும் போலிருக்கு விஸ்வா என உருகிப்போனாய்.. அந்த பின்னிரவில் ஈரமான தொடுகையில் விழித்துப் பார்க்கையில் நீ என்னை முத்தமிட்டுக் கொண்டிருந்தாய் ஏய் தூங்கு என கோபித்தபோது தூங்குமூஞ்சி எனச் சொல்லி நெருங்கி வந்து படுத்துக் கொண்டாய்.நம் காதலை நீ அவசரப்பட்டு சொல்லியிருக்க வேண்டாம் ஹேமா! எவ்வளவு விரைவாய் நடந்தது அந்தப் பிரிவு.மீண்டும் வேலை மாற்றம்,உன் அக்காவின் பிரச்சினைகள்,அம்மாவின் பிடிவாதம், என் தற்கொலை முயற்சி, உன் கதறல்கள், நமது குடும்பத்திற்க்குள் நடந்த அடிதடி……..எதுவிருப்பினும் நீ என்னை விட்டுப் போயிருக்க வேண்டாம் ஹேமா!

No comments:

Post a Comment